தைவானை தொடர்ந்து அச்சுறுத்தும் சீனா - வான்வெளியை வட்டமிடும் போர் விமானங்கள்
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் தனி நாடாக பிரிந்தது.
எனினும் அதனை தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா கருதுகிறது.
தைவானுடன் தூதரக உறவுகள் வைக்கக்கூடாது என்று மற்ற நாடுகளையும் சீனா எச்சரித்துள்ளது. ஆனால் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வருகை புரிந்தார். அதேபோல் தைவான் துணை ஜனாதிபதி சாய் இங் வென் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்து பேசினார்.
தைவானின் இந்த அரசியல் நடவடிக்கைகளால் சீனா மிகவும் அதிருப்தி அடைந்தது. இதனால் சமீப காலமாக தைவான் எல்லையில் சீனா அடிக்கடி போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது.
இதற்கிடையே சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தைவான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது.
எனினும் சீனாவின் அச்சுறுத்தல் தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக தைவானை நோக்கி அனுப்பும் போர் விமானங்களின் எண்ணிக்கையை சீனா தற்போது அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் சீனாவுக்கு சொந்தமான 103 போர் விமானங்கள் தைவான் எல்லையில் பறந்தன. அதில் 40 விமானங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையை தாண்டியதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
அதேபோல் 9 போர் கப்பல்களும் தைவானின் கடற்பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அங்கு போர்ப்பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. எனவே, இதுபோன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு தைவான் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Post a Comment